திருமண தோஷம் போக்கும் வாழைப்பரிகார பூஜை
திருப்பைஞ்ஞீலி கோயிலில் எழுந்தருளி அருள்புரியும் இறைவனை, ஞீலிவனநாதர், கதலிவசந்தர், ஆரண்ய விடங்கர், நீல கண்டேசுவரர், சோறுடை ஈசுவரர் என்று பல பெயர்களிட்டு அழைத்துப் போற்றுகின்றனர். இறைவி விசாலாட்சி (நீள் நெடுங்கண்ணம்மை) எனப் போற்றப்படுகின்றார்.
ஞீலி பசுமையான வாழை:
ஞீலி என்றால் பசுமையான வாழை என்பது பொருள். இக்கோயிலின் தலவிருட்சமாக (மரமாக) வாழை விளங்குகிறது. இம்மரத்திலிருந்து கிடைக்கும் இலை, காய், பழம் யாவும் இறைவனுக்கே அளித்து விடுகின்றனர்.
இக்கோயிலில் தலவிருட்சமான வாழை மரங்கள் பக்தர்களால் போற்றி வழிபடுவதைக் காணலாம். சிவபெருமான் தட்சிணாமூர்த்தியாக யோகத்தில் அமர்ந்தார். தேவியும் இங்கே வந்து தவமிருந்தார்.
நிழல் தரும் மரங்கள் இல்லாததைக் கண்டு தனக்கு பணி செய்ய வந்த தேவ மகளிரை இங்கே வாழை மரமாக இருக்குமாறு வேண்டிக் கொண்டாள். தேவகன்னிகைகள் இங்கே வாழை மரமாக இருக்கிறார்கள் எனத் தலப் புராணம் கூறுகிறது.

இறைவன் அளித்த கட்டமுது:
இத்தலத்தில் திருநாவுக்கரசர் பெருமானுக்கு இறைவனே கட்டமுது தந்தது இறைவனின் எல்லையில்லா கருணைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. காவிரிக்கரையில் பல திருத்தலங்களை தரிசித்துவிட்டு, அப்பர் பெருமான் திருப்பைஞ்ஞீலி திருத்தலத்திற்கு வருகிறார்.
நடந்துவந்த களைப்பு சோர்வு தனது அடியார்க்கு ஏற்பட்ட சோர்வினை போக்க இறைவனே சோலையை உண்டாக்கி, தாகம் தணிக்க நீர் நிலையும் அமைத்து கட்டமுதும் அளித்து பசியைப் போக்கிய சிறப்பானத்தலம் இது. இதனை
“ஆடல் புரிந்தார் அடியேனைப் பொருளா
அளித்த கருணை எனப் பாடல் புரிந்து
விழுந்தெழுந்து கண்ணீர் மாரி பயில்வித்தார்’
எனப் பெரிய புராணம் போற்றுகிறது.
திருக்கோயில் அமைப்பு:
கிழக்கு நோக்கிய திருக்கோயில். கோயிலின் ராஜ கோபுரம் முழுமை அடையாவிட்டாலும், பாண்டிய மன்னர் கலைப் பாணியுடன் அழகிய சிற்ப வேலைப்பாட்டுடன் காட்சி தருகிறது. நுழையும் வழியில் பக்கச் சுவர்களில் பைரவர், அதிகார நந்தி ஆகிய இறைவடிவங்கள் காட்சி தருகின்றன.
இத்தலத்து இறைவனை திருமால், இந்திரன், காமதேனு, ஆதிசேஷன், வாயுபகவான், அக்கினி, சூதமாமுனிவர் ஆகியோர் வழிபட்டதாக புராண வதலாறு கூறுகிறது. இராஜ கோபுரத்தை அடுத்து இடது பக்கம் ஒரு மரத்தின் கீழ் சூதகமகா முனிவர் வடிவினைக் கண்டு வழிபடலாம்.
இத்திருக்கோயிலில் மூன்று திருச்சுற்றுகள் உள்ளன. மூன்றாவது திருச்சுற்றில் வலம் வருவோம். இராஜகோபுரத்தை அடுத்து இடது புறத்திலும், வலது புறத்திலும் காசி விசுவநாதர், திருத்தளீசுவரம் உடைய நாயனார் திருக்கோயில் (சந்நிதிகள்) உள்ளன.
தெற்குத் திருச்சுற்றில் பாறையை குடைந்து அமைக்கப்பட்ட குடைவரைக் கோயிலில் சிவபெருமானின் சோமாஸ்கந்தர் வடிவத்தைக் கண்டு வழிபடலாம். இறைவனுக்கு வலது பக்கம் தேவி அமர்ந்திருப்பது சிறப்பானது. இறைவன் – இறைவிக்கு நடுவே (கந்தன்) முருகன் அமர்ந்திருக்கும் கோலம் மிக அழகாய் விளங்குகிறது. இறைவனது காலின் கீழ் முயலகன் வடிவம் காணப்படுகிறது. இத்தலத்தில் இறைவன் எமதர்மனுக்கு உயிர் அளித்தார்.
அற்புத நவக்கிரகங்கள்:
மூன்றாம் திருச்சுற்றிலிருந்து கோயிலினுள் செல்லும் முன் சிறிய கோபுரம் உள்ளது. இதனைக் கடந்து வந்தால் கொடிமரம், பலிபீடம், நந்தியை வழிபட்டவுடன் ஒன்பது குழிகளில் தீபம் ஏற்றப்பட்டுள்ளதைக் காணலாம். இதுவே நவக்கிரகம் எனக் கூறப்படுகிறது. நவக்கிரகங்களுக்கு என்று தனி சந்நிதி இல்லை.
நவக்கிரகத் சூரியன் வழிபடும் ஞீலிவனநாதர்:
சுயம்பு மூர்த்தியான இறைவன் ஞீலிவனநாதர் ஆரணீய விடங்கர் எனப் போற்றப்படுகின்றார். புரட்டாசி மாதத்தில் 6, 7, 8 தேதிகளிலும், பங்குனி மாதத்தல் 6, 7, 8 தேதிகளிலும் சூரியனது ஒளி இறைவன் மீது படும் அற்புதக்காட்சியைக் கண்டு வழிபடலாம். திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவராலும் போற்றப்பட்ட திருத்தலம்.

வாழைப் பரிகாரம் :
திருமண தோஷப் பரிகாரத்திற்கு இத்தலம் தனிச்சிறப்புடையதாக விளங்குகிறது. ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் திருமணம் தடங்கல் ஏற்பட்டு நிறைவேறாதவர்கள், இக்கோயிலில் உள்ள வாழை மரங்களுக்கு வழிபாடு செய்து. மாங்கல்யம் கட்டுகின்றனர். அவர்களின் வேண்டுதல் நிறைவேறி திருமணம் நடைபெறுவதால் பலர் இக்கோயிலுக்கு வந்து வாழைப்பரிகார பூஜை செய்வதைக் காணலாம்.
For Details and news updates contact:
Send Your Feedback at : editor@swasthiktv.com
The post திருமண தோஷம் போக்கும் வாழைப்பரிகார பூஜை appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.





